புதுச்சேரி முதல்வர் தொகுதியில் நாதக பிரசார வாகனத்தை சேதப்படுத்திய தவெக ரவுடி

புதுச்சேரி, ஏப். 1: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் நாதக பிரசார வாகனம் மீது மாம்பழத்தை வீசி கண்ணாடியை சேதப்படுத்திய தவெக ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் வாக்குபதிவுக்கு மிக குறைந்த நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வேட்பாளர்களும் வீடுவீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்குமார், ஜீவா நகர் காலனி செல்வ விநாயகர் கோயில் அருகே பிரசார வாகனம் செல்ல, நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பழக்கடையில் நின்றிருந்த நபர், திடீரென ஒரு மாம்பழத்தை கொண்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனத்தின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

இதில் பிரசார வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து உடனே பிரசாரத்தை நிறுத்திய கார்த்திக்குமார், தனது கட்சியைச் சேர்ந்த சக வேட்பாளர்களுடன் உடனே கோரிமேடு காவல் நிலையத்தில் முறையிட்டார். அக்கட்சி பிரமுகரான முத்துபிள்ளைபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஆபாச பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பிரசார வாகனத்தின் மீது மாம்பழத்தை வீசியது தமிழக பகுதியான நாவற்குளத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற வசந்த் (35) என்பதும், தவெக தலைவர் விஜய் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் ரவுடியான இவர் மீது 2 அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவர, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.