வலங்கைமான், பிப்.18: வலங்கைமானில் நீடாமங்கலம் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளி விடுமுறைக்கு பிறகு கடந்த 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டது. அதனை அடுத்து கடந்த 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் 2ம் பருவ பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை வீட்டுக்கு செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர். இந்நிலையில் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கட்டணம் கட்டுவது குறித்து முன்னதாக எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படாத நிலையில் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு ஏன் அனுப்பினீர்கள். மாணவர்களை நேற்று பள்ளியின் வெளியிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைத்தது ஏன்? பள்ளி கட்டணம் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தினை கூட்டி தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.