சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் சீல் வைத்த கவரில் மத்தியஸ்தர் நீதிபதி பி.என்.பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.
இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்று நிரூபிக்க அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்தார்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
