ஓசூர், பிப்.18: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பொக்லைன் வாகன உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 3 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் மாநகரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொக்லைன்கள் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில், பொக்லைன் இயந்திர உரிமையாளர் நலசங்கம் சார்பில், சுமார் 200க்கும் மேற்பட்ட பொக்லைன்களை நிறுத்தி வைத்து நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொன்லைன் வாகன உரிமையாளர்கள் கூறுகையில், ‘டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, புதிய வண்டி விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரக்கோரி, தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால், தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.