சென்னை: கொரோனா காலத்தில் பழனிசாமியின் கேவலமான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளித்திருக்கிறது மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் துள்ளத் துடிக்க கொல்லப்பட்டதற்கு அடுத்து நடந்த பெரிய வன்முறை, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் அதிர்ச்சி மரணங்கள் தமிழகத்தை தாண்டி உலகளவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
அவர்கள் கொல்லப்பட்டதற்கு முந்தைய மாதம்தான் அமெரிக்க போலீசாரால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் கைகோத்துப் போராடினார்கள். அதற்கு இணையான ஒன்றாக மனித உரிமை கொடூரமாக சாத்தான்குளம் சம்பவம் பேசப்பட்டது. இந்தியா முழுக்க சாமானியர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை கண்டங்களை தெரிவித்தார்கள். சாத்தான்குளம் சம்பவத்தை ‘இரட்டைப் படுகொலை’ என்று விமர்சித்த அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் அழுத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று உறுதியளித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆரம்பக்கட்டத்திலேயே குரல் கொடுத்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இத்தனைக்கும் ஜெயராஜும் பென்னிக்ஸும் குற்றவாளிகள் அல்ல. ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் விதியை மீறிக் கடையை திறந்து வைத்திருந்தார்கள்’ என்பதுதான் அவர்கள் மீதான எடப்பாடி பழனிசாமி காவல் துறையின் குற்றச்சாட்டு. இப்போது மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘’கொரோனா காலத்திலும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’’ என மார்தட்டுகிறாரே எடப்பாடி பழனிசாமி. அந்த கொரோனா காலத்தில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் பழனிசாமியின் சிறப்பான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி.
கொத்தாக காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சில மணி நேரத்தில் இருவருமே அடுத்தடுத்து இறந்து போக, ‘உடல்நலக்குறைவு ’என்று வழக்கமான காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு. 2020 ஜூன் 22ம் தேதி ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்தார்கள். இரண்டு நாள் கழித்து 24ம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ’சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகச் சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறையில் இருந்த ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்’ எனக் குறிப்பிட்டார். போலீசாரால் கொல்லப்பட்டவர்களை ’மூச்சுத்திணறல் – உடல்நலக்குறைவு’ என முதல்வரே பொய் சொல்லிக் காவல்துறையினரை காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை நோயாளி ஆக்கிய மனசாட்சி இல்லாத மனிதர்தான் எடப்பாடி பழனிசாமி.
மாபாதகச் செயலைச் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல் பச்சைப் பொய் சொன்னார் பழனிசாமி. ‘உடல்நலக்குறைவு’ என்று காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது எடப்பாடி அரசு. காவல்துறையினர் நடத்திய கொலைவெறித் தாண்டவத்திற்கு ஆதரவு அளித்தவர்தான் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்ததோடு பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு ஆதரவாக மக்களோடு இணைந்து போராடியது திமுக.
சாத்தான்குளம் கொடூரக் கொலைச் சம்பவத்தில் இன்றைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ’மூச்சுத்திணறல் – உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தனர்’ என பழனிசாமி சொன்ன அபாண்டப் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒருவகையில் குற்றவாளிதான். பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
