பந்தலூர், பிப். 17 : பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பந்தலூர் மற்றும் கூடலூரில் தனியார் வாகனங்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆட்டோ, டேக்சி உள்ளிட்ட தனியார் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், டேக்சி, ஜீப் டிரைவர்கள் நேற்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை வாகனங்களை இயக்காமல் நிறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவசர தேவைக்காக ஒரு சில வாகனங்கள் மட்டும் இயங்கின. இதனால் பந்தலூர் பஜார் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.