இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். சேலம் சூரமங்கலம் பகுதியில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு விநியோகிக்க, தவெக சார்பில் விசில் சின்னத்துடன் கூடிய வாட்டர் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும்படை அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஆசாத் நகரில் உள்ள மசூதி முன்பு 500க்கும் மேற்பட்ட வாட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதில் விசில் சின்னம் இடம் பெற்றிருந்ததுடன், டிவிகே என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த தவெகவினர், இதனை இஸ்லாமியர்களுக்கு விநியோகிக்க தொடங்கினர். இதனையடுத்து அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளின்படி இதுபோன்று வாட்டர் பாட்டில்களை விநியோகிக்க கூடாது என எச்சரித்தனர். பின்னர், அங்கு இஸ்லாமியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 805 வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
