நாகர்கோவில், பிப்.11 : தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின், கடந்த செப்டம்பரில் இருந்து படிப்படியாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கின. தற்போது முழு அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இடைநில்லா (என்ட் டூ என்ட் ) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குகின்றன. இடைநில்லா பஸ்கள் என்பதால் கண்டக்டர்கள் இன்றி இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் வைத்தே டிக்கெட் கொடுக்கப்பட்டு விடும். ஒவ்வொரு பஸ்சிலும் (5 டிரிப்) நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹25 ஆயிரம் வரை வசூல் உள்ளது. முகூர்த்த நாட்கள், விழாக்காலங்களில் வருமானம் அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கு தளர்வு முடிந்து போக்குவரத்து தொடங்கிய பின், என்ட் டூ என்ட் பஸ்களும் கண்டக்டருடன் இயங்க தொடங்கின. இடையில் காவல்கிணறு பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தனர்.