கொடைக்கானல், மார்ச் 13: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று தோட்டக்கலை துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் 10 மேலாக பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தரபடுத்தப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி மலைப்பிரதேசத்தில் பணியாற்றும் தோட்டக்கலை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தோட்டக்கலை நிர்வாகம் வழங்க வேண்டும், நிரந்தரப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சிபிஎஸ் பணம் பிடித்திட வேண்டும், ஓராண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஈட்டுறுதி திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதில் 150க்கும் மேற்பட்ட தோட்டக்கலை துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
