இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானம் விபத்து: விமானிகள் 2 பேர் உயிரிழப்பு

 

டெல்லி: இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானம் அசாம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். Su-30 விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோரின் உயிரிழந்தனர்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சு-30 எம்.கே.ஐ (Su-30 MKI) ரக போர் விமானம் ஒன்று, அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் (Jorhat) விமான தளத்திலிருந்து (மார்ச் 5, 2026) நேற்று மாலை புறப்பட்ட நிலையில், திடீரென ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடன் இருந்த கடைசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானம் மற்றும் அதில் இருந்த விமானிகளின் நிலை குறித்து அறிய ‘தேடுதல் மற்றும் மீட்பு’ (Search and Rescue) பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.

விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வந்த நிலையில், இந்திய விமானப்படையின் எஸ்யூ-30 எம்கேஐ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.சுமார் 60 கிமீ தொலைவில் அங்லாங் பகுதியில் அந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஸ்குவாட்ரான் தலைவர் அனுஜ், லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Su-30MKI என்பது ரஷ்யாவை சேர்ந்த சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 இருக்கைகள் கொண்ட, பல்பணி சார்ந்த நீண்ட தூர போர் விமானமாகும். இது தற்போது இந்திய விமானப்படைக்காக (IAF) HAL உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இந்திய விமானப்படையில், 260க்கும் மேற்பட்ட Su-30MKI விமானங்கள் உள்ளது. ஜூன் 2024 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. ஜனவரி 2023 ஆம் ஆண்டில் மற்றொரு சுகோய்-30 விமானம் குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளானது.

Related Stories: