ரேசில் அண்ணாமலை அவுட்: உற்சாகத்தில் அதிமுக எம்எல்ஏ

கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.ஆர்.ஜெயராம் இருந்து வருகிறார். இவர், பாஜ முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உடன் இணைந்து பல்வேறு நிலங்களை ஆக்கிரமித்ததாக புகார்கள் எழுந்தன. இதனிடையே, சிங்காநல்லூர் தொகுதியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

இதனால், தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என கடந்த சில மாதங்களாக கே.ஆர்.ஜெயராம் சைலண்ட் மோடில் இருந்து வந்தார். இந்நிலையில், பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் அண்ணாமலைக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். மேலும், தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து அண்ணாமலை பின்வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் உற்சாகம் அடைந்த கே.ஆர்.ஜெயராம் மீண்டும் ஆக்டிவ் மோடிற்கு வந்துள்ளார். தொகுதி முழுக்க போஸ்டர் ஒட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பரிசுப்பொருட்கள் வழங்குதல் என சுற்றி சுற்றி வேலை செய்து வருகிறார். அதேசமயம் அண்ணாமலை போட்டியிட்டாலும், போட்டியிடவில்லை என்றாலும் சிங்காநல்லூர் தொகுதியை பாஜவிற்கே ஒதுக்க வேண்டும் என பாஜ நிர்வாகிகள் அதிமுகவிற்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.

மேலும், அத்தொகுதிக்குள் தீவிரமான தேர்தல் பணிகளிலும் பாஜவினர் ஈடுபட்டு வருகின்றனர். தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்கு பாஜ தடையாக வந்திருப்பதன் காரணமாக, கே.ஆர்.ஜெயராம் அப்செட் அடைந்துள்ளராம். பாஜவிற்கு இந்த தொகுதியை விட்டுத்தரக்கூடாது எனவும், தனக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் அவர் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறாராம்.

Related Stories: