சென்னை: ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலை குழு அறிக்கையின் முதற்பாகத்திற்கு வரவேற்பு தெரிவித்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலை குழு அறிக்கையின் முதற்பாகம் குறித்த தங்களது வரவேற்புக்கு நன்றி.
எங்களது முன்னெடுப்புக்கான தங்களது அறிவார்ந்த ஆதரவையும், கூட்டாட்சி கருத்தியலை புதுப்பிக்கும் முயற்சி கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் என தாங்கள் அங்கீகரித்திருப்பதையும் வெகுவாக பாராட்டுகிறேன். “பன்முகத்தன்மை கொண்ட இந்திய குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மை கொண்டு நிலைக்கச் செய்ய முடியாது, அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதனை செய்ய இயலும்” என தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகச் சரியானது என ஆமோதிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
