அமராவதி: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சாமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 18 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாமர்லகோட்டா மண்டலத்திற்குட்பட்ட வேட்லபாலம் – மேடப்பாடு கிராமங்களுக்கு இடையே இந்த பட்டாசு தயாரிப்பு மையம் இயங்கி வந்தது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மருந்துக் கிடங்கில் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிப்புச் சத்தம் சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. வெடிவிபத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களின் உடல்கள் பாகங்களாகச் சிதறி பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடம் முழுவதும் சாம்பல் மேடாகவும், கருகிய உடல்களுடனும் போர்க்களம் போல காட்சியளித்தது. அருகில் உள்ள ஐந்து கிராமங்கள் வரை அடர்ந்த புகை சூழ்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
