* ரிங்கு சிங் தந்தை காலமானார்
அலிகார்: உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கின் தந்தை காஞ்சந்த் சிங், கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனிக்காமல் அவர் காலமானார். இதுகுறித்து ரிங்கு சிங்கின் முன்னாள் பயிற்சியாளர் மசூத் அமினி நிருபர்களிடம் கூறுகையில், ‘கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ரிங்கு சிங்கின் தந்தை காலமானார் என்ற தகவல் வந்துள்ளது’ என்றார்.
* குகேஷ்-யாகுப்போவ் செஸ் போட்டி டிரா
பிரேக்: செக் குடியரசின் பிரேக் நகரில் பிரேக் சர்வததேச செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் பங்கேற்று ஆடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் அமெரிக்காவின் ஹான்ஸ் நீமான் உடன் நடந்த போட்டியில் குகேஷ் டிரா செய்தார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுப்போவ் உடன் குகேஷ் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதேசமயம், தமிழகத்தை சேர்ந்த, நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமான் உடன், 2வது சுற்றில் மோதி அதிரடியாக வெற்றி பெற்றார்.
* ஜஸ்பிரித் பும்ராவை முந்திய அர்ஷ்தீப்
சென்னை: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 24 ரன் தந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 35 (19 போட்டிகள்) ஆக உயர்ந்தது. இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதற்கு முன், ஜஸ்பிரித் பும்ரா, 23 போட்டிகளில் 33 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
