அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் பாஸ்போர்ட் வைத்திருப்பது, வௌிநாடு செல்வது தனிப்பட்ட சுதந்திரம்: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: பாஸ்போர்ட் வைத்திருப்பது, வௌிநாடு செல்வது ஆகியவை தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒருங்கிணைந்த அம்சம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரஹேஜா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் யோகேஷ் ரஹேஜா கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது, அவருக்கு எதிரான எஃப்ஐஆர் ஒன்று நிலுவையில் இருப்பது குறித்த தகவலை பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்பத்தில் குறிப்பிட தவறியதற்காக யோகேஷ் ரஹேஜாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி முடக்கப்பட்டது. இதை எதிர்த்து யோகேஷ் ரஹேஜா தாக்கல் செய்த மேல்முறையீடும் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒருவர் பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கும், வௌிநாடு செல்வதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையின் ஒருங்கிணைந்த அம்சம். பாஸ்போர்ட் வைத்திருக்கும் உரிமை மீதான அரசின் நடவடிக்கைகள் அதற்கான சோதனைகளை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். எனவே, யோகேஷ் ரஹேஜாவுக்கு எதிராக கடந்த 17.01.2025 மற்றும் 25.03.2025 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன” என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: