குன்னூர்,பிப்.9: கோத்தகிரி ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றுவது மற்றும் கோயில் திருவிழா பிரச்னை தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 2500 வீடுகளில் நேற்று பொது மக்கள் கருப்புகொடி ஏற்றினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளாவில் உள்ள கைகாரு சீமை 18 கிராமங்களுக்கு சொந்தமான இடத்தில் பிரசித்தி பெற்ற ஹெத்தை அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கைகாரு சீமை மக்களுக்கும் கோவில் பூசாரிகளுக்குமிடையே பிரச்னை நிலவியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்னூர் சப்.கலெக்டர் ரஞ்ஜித் சிங் உள்ளூர் பூசாரிகள் இருவரை தவிர வெளியூர் பூசாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்களும் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் கடந்த மாதம் கைகாரி சீமை மக்களை கலந்து ஆலோசிக்காமல் பூசாரி தரப்பினர் சார்பில் திருவிழா நடத்த கடைசி நிமிடத்தில் புதிய ஆணை பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமானது சப்.கலெக்டர் பிறப்பித்த ஆணைகளை உறுதி செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் செயல்படுத்திடும்மாறு உத்தரவு பிறப்பித்தது.