சுடுகாட்டுக்கு சாலை போட வலியுறுத்தி வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகம் பிப்.11ல் முற்றுகை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு

விருதுநகர், பிப்.9:  சுடுகாட்டுக்கு சாலை அமைக்க வலியுறுத்தி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பிப்.11ம் தேதி முற்றுகையிடப்படும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், வெம்பக்கோட்டை ஊராட்சி சங்கரபாண்டியபுரம் அருந்ததியர் காலனி மக்கள் சுடுகாடு செல்லும் பாதை முட்புதராக இருப்பதால் சென்று வரமுடியவில்லை. புதிய சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. போராட்டங்களின் போது அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்து நடவடிக்கை எடுக்காமல் விடுகின்றனர். எனவே புதிய சாலை அமைத்து தர வலியுறுத்தி காலனி மக்களுடன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பிப்.11ம் தேதி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: