கொடைக்கானல், பிப்.9: கொடைக்கானல் அருகே மலைகிராமத்திற்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தது பரப்பன்ஓடை. இந்த பகுதியில் 100 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இவர்கள் பயன்படுத்தும் மண் பாதை நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்தப் பகுதியில் உள்ள தனியார் தனது தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை இந்த மண் பகுதியில் திறந்து விடுவதால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருகின்றனர். உடல் நலம் இல்லாத பெண்கள், முதியவர்களை டோலி கட்டி கொடைக்கானல் மருத்துவமனைக்கு கொண்டு வரக்கூடிய அவல நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பகுதியைச் சேர்ந்த டெல்சி என்ற பெண் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டார். இவரது உடலை இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று பின்னர் லூர்துபுரம் பகுதியில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.