×

‘வரி விதிப்பு செல்லாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 10% புதிய இறக்குமதி வரியை விதித்து டிரம்ப் பதிலடி: சர்வதேச வர்த்தகர்கள் மத்தியில் பெரும் குழப்பம்

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் 10% புதிய வரியை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ‘கடந்த 1977ம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6-3 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தனர். வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது என்றும், அதிபருக்கு இதில் வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்றும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. டிரம்பால் நியமிக்கப்பட்ட இரு நீதிபதிகள் அவருக்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தத் தீர்ப்பை ‘தேசப்பற்றற்ற செயல்’ என்றும், தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்களின் குடும்பத்திற்கே அவமானம் என்றும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, 1974ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122வது பிரிவைப் பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் புதிய இறக்குமதி வரியை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த புதிய வரி விதிப்பு வரும் 24ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது பொருளாதாரக் கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இதுவரை வசூலிக்கப்பட்ட சுமார் 100 பில்லியன் முதல் 200 பில்லியன் டாலர் வரையிலான வரிப் பணம் செல்லாததாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இறக்குமதி நிறுவனங்கள் தங்களது வரிப் பணத்தைத் திரும்பப் பெற சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தை அணுகும் சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும் இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தத் தீர்ப்பு வர்த்தக ரீதியான பல சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்று இந்தத் தீர்ப்புக்கு எதிராக வாக்களித்த நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்த புதிய வரி விதிப்பில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியத் தாதுக்கள் மற்றும் தக்காளி, மாட்டு இறைச்சி போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பால் பங்குச் சந்தைகள் ஆரம்பத்தில் உயர்ந்தாலும், டிரம்பின் அடுத்தடுத்த அதிரடி வரி அறிவிப்புகளால் வர்த்தகர்கள் மத்தியில் மீண்டும் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

 

Tags : Supreme Court ,Trump ,Washington ,Overseas Supreme Court ,US ,President ,Donald Trump ,International ,
× RELATED இம்ரான்கான் விடுதலை படை...