கஜா புயல் பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் உண்ணாவிரத போராட்டம்

நாகை, பிப். 5: கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகையில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 35 சதவீத இழப்பீடு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதுபோல் நாகை மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கடந்த மாதம் 25ம் தேதி நாகை அவுரித்திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஆனால் இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்தை வேதாரண்யத்தில் காந்தியடிகள் உப்பு சத்யாகிரகம் நடத்திய நினைவு இடத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: