×

தமிழ்க்கூடல் விழா தாய் மொழியை பிறமொழி கலப்பில்லாமல் பேசவேண்டும்

பெரம்பலூர்,பிப்.20:பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகேயுள்ள எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்க்கூடல் நிகழ்வு நடை பெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை(பொ) பிரியா தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னால் மாவட்டச் செயலாளரான எழுத்தாளர் இராமர் கலந்து கொண்டு சிறப்புரை பேசியதாவது:

பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தற்போதைய வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் இளைஞர்கள் மாணவர்கள் ஒன்றுதிரண்டு வங்க மொழியை தேசிய மொழியாகவும், கல்வி மொழியாகவும் அறிவிக்கக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்தினர். இதில் அந்த அரசாங்கத்தின் அடக்கு முறையால் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் நான்கு இளைஞர்கள் உயிர் நீர்த்தனர். இந்த நாளை நினைவு படுத்தும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 1999 ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. நமது தாய் மொழியான தமிழ்மொழி உலகத்தின் மூத்த மொழி. உயர்தனிச் செம்மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். உலகத்தில் கலப்படம் இல்லாதது தாய்ப்பால். அது போல் நமது தாய்மொழியை பேசும்போது பிறமொழி கலப்பில்லாமல் மாணவர்கள் பேசவேண்டும்.

தமிழிலே பேசு, தமிழிலேபாடு, தமிழிலே பாடி ஆடு, தமிழ் தப்பினால் உன் காதை மூடு என்று பாவேந்தர் கூறினார். பாவேந்தர் கூற்றுப் படி நாம் நம்முடைய தன்மானத்தைக் காப்போம். தமிழ் மொழியை வளர்ப்போம், தமிழனாய் இருப்பதில் பெருமை கொள்வோம் எனத் தெரிவித்தார். இறுதியாக பள்ளித் தலைமையாசிரியை (பொ) பிரியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

 

Tags : Tamil Koodal Festival ,Perambalur ,Tamil Koodal ,Egmore Government High School ,Vepur ,Kunnam taluka, Perambalur district ,headmistress ,P.O. ,Priya ,Stalin ,
× RELATED கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா