கொழும்பு: உலகக் கோப்பை டி20 தொடரின் 38வது போட்டி கொழும்பு நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிஸங்கா, குஸால் பெரேரா, 54 ரன் சேர்த்த நிலையில், குஸால் 22 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த குஸால் மெண்டிஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிஸங்கா 41 பந்துகளில் 62 ரன் விளாசி ஓய்ந்தார். இலங்கை 20 ஓவரில் 7 விக். இழப்புக்கு 178 ரன் எடுத்தது. பின், 179 ரன் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே துவக்க வீரர் பிரையன் பென்னட் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 48 பந்துகளில் அவர் ஆட்டமிழக்காமல், 63 ரன்களை விளாசினார். மற்றொரு துவக்க வீரர் தடிவனஷே மருமணி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த ரையான் புரி 23, கேப்டன் சிக்கந்தர் ராஸா 26 பந்துகளில் 45 ரன் குவித்து அவுட்டாகினர். 19.3 ஓவரில் ஜிம்பாப்வே 4 விக்கெட் இழந்து 182 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராஸா ஆட்ட நாயகன்.
