குடிபோதையில் தூங்கிய போது விபரீதம் பொக்லைன் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, பிப்.5: கிருஷ்ணகிரி அருகே பொக்லைன் சக்கரத்தில் தலை நசுங்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் போத்திநாயனப்பள்ளி அருகே பெரியதக் கேப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(30). கூலித் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீடு அருகில் வந்தார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் முன்புறமாக படுத்து தூங்கினார். இந்நிலையில் அதிகாலையில் பொக்லைனை டிரைவரான வேட்டியம்பட்டி கோவிந்தராஜ் என்பவர் வந்து இயக்கினார். அப்போது பொக்லைன் டயர் நசுக்கியதில் தலை நசுங்கி கோவிந்தராஜ் பலியானார்.

இந்நிலையில் காலையில் வீடு அருகில் கோவிந்தராஜ் தலை நசுங்கி பலியாகி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்.ஐ. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பலியான கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைனை பறிமுதல் செய்து டிரைவரான வேட்டியம்பட்டி கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: