சிவகங்கை, பிப்.5: சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி போலீஸில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்சனை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்சனைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர். தொடர்ந்து போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை டிரான்ஸ்பர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து தற்போது எலெக்சன் செல் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரேமானந்த், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் இப்பிரிவில் உள்ளனர். இவர்களுக்காக தனி அலுவலகம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.