கீழக்கரை, பிப்.5: ஏர்வாடி அருகே கடல் நடுவே உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மணல்திட்டு பகுதி உள்ளது. இங்கு அரியவகை பவளப் பாறைகள், கடல் பாசிகள், கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த மணல் திட்டு பகுதிக்கு ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டது. மன்னார் வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் கணேசலிங்கம் முன்னிலை வைத்தார். கண்ணாடி இழை படகு போக்குவரத்தை ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் துவக்கி வைத்தார். மண்டல அலுவலர் லோகநாதன், துணை மண்டல அலுவலர் கனகராஜ், காளிதாஸ், கவுன்சிலர் மலைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலில் 12 பேர் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து மணல் திட்டு பகுதிக்கு பயணம் செய்தனர்.