பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், நீர்மட்டம் 85 அடியாக சரிந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு பருவ மழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் சிறு அருவிகள், ஆறுகள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கடந்த ஒன்றரை மாதமாக போதிய மழையின்றி, அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாமல் உள்ளதால், அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 100 முதல் 150கன அடியாக குறைந்து உள்ளது.
இதில், ஆயக்கட்டு விவசாய பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு என அணையில் இருந்து வினாடிக்கு 650கன அடி, தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிய துவங்கியது. இதில் நேற்று, அணையின் நீர்மட்டம் 85 அடியாக சரிந்து காணப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் சரிவால், அணையின் பல்வேறு இடங்களில் பாறைகளும், மண் திட்டுகளும் வெளியே தெரிய துவங்கியுள்ளது. தண்ணீர் வரத்து குறைவாக இருந்தாலும், வெளியேற்றம் அதிகரிப்பால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தண்ணீர் திறப்பு காலம் நிறைவடைந்ததும், கோடை வெயிலை கருத்தில் கொண்டு தேக்கி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
