- பள்ளி கல்வித் துறை
- மாநில தேர்வு துறை
- சென்னை
- அமைச்சர்
- சென்னை ஊராட்சி
- அமில் மஹெஸ்
- அண்ணாசலை தேவநாயப் பவனார் மாவட்ட மத்திய நூலக கூட்டாட்சி
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை, அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் இன்று (16.02.2026) மார்ச்/ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் – 2026 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 02.03.2026 முதல் 26.03.2026 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு (Arrear) 03.03.2026 முதல் 27.03.2026 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 11.03.2026 முதல் 06.04.2026 வரையும் நடைபெறவுள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 09.02.2026 முதல் 14.02.2026 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு (Arrear) 16.02.2026 முதல் 21.02.2026 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 23.02.2026 முதல் 28.02.2026 வரையும் நடைபெறவுள்ளது.
மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 7,99,692 மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலை முதலாம் ஆண்டுப் (Arrear) பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர்.மேல்நிலை தேர்வுகளுக்கு 3,412 தேர்வு மையங்களிலும், மேல்நிலை முதலாம் ஆண்டுப் (Arrear) தேர்வுகளுக்கு 2,615 தேர்வு மையங்களிலும் மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 4,219 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 17,61,528 தேர்வர்கள் 2025-26-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900- க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மார்ச்/ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வில் கீழ்க்காணும் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்கள்.
1.மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு பெரிய எழுத்துக்களில் “A4” அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது.
2.இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் “Ordinary Calculator without Programming” பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3.தேர்விற்கு வருகைபுரிந்த மாணாக்கர்களுக்கு வினாத்தாட்கள் வழங்கியபின்னர், ஒவ்வொரு தேர்வறையிலும் மீதமுள்ள வினாத்தாட்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறை காரணமாக, வினாத்தாட்களின் மந்தணத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.
4.“சொல்வதை எழுதுபவர்” சலுகையினைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாட்கள் கொண்ட வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறை காரணமாக, வினாத்தாட்களின் மந்தணத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.
5.தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தும்பொருட்டு, சொல்வதை எழுதுபவர் நியமனங்களில், B.Ed.,/DIET/கலைக் கல்லூரிகள்/தொழிற்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி பணியாளர்களை தன்னார்வலர்களாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், இம்மாணாக்கர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
6.இவ்வாண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன்.B இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர். பூ.ஆ.நரேஷ், அரசுத் தேர்வுகள் இயக்குநர் திருமதி. கே.சசிகலா உள்ளிட்ட இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/ இடைநிலை/ தனியார் பள்ளிகள்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
