கோவை, பிப்.10: கோவை மாவட்டத்தில் 368 மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது. சில விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யவில்லை. குறிப்பாக விடுதிகளில் மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் வந்தது. மகளிர் தங்கும் விடுதியில் உரிய வசதிகள் செய்து தர வேண்டும், முறையாக உரிமம் பெற்று நேர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக நலத்துறை அறிவித்தது.
சில தங்கும் விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக புகார் தரப்பட்டது. சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தபோது 21 விடுதிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. இந்த விடுதிகள் உடனடியாக உரிமம் பெற வேண்டும். இல்லாவிட்டால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
