வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இளம்பெண்ணின் மாமியார் கைது செய்யப்பட்டார். மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் சிவபாலன்(33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி காவ்யா(20). காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது 6 மாத கைக்குழந்தை சமீரா. காவ்யாவின் மாமியார் செந்தமிழ்செல்வி(52), தகட்டூர் கோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். மாமனார் பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்.
மாமியார், மாமனார் இருவரும் காவ்யாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவபாலன் தனது மனைவி காவ்யாவை அருகில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டிருந்தார். இதனால் மன உளைச்சலில் காவ்யா இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் 6 மாத குழந்தையுடன் காவ்யா குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் செல்போனில் பேசி ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், எனது கணவர் சிவபாலன் நல்ல மனிதர். ஆனால் எனது மாமியார், மாமனார் ஆகியோர் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். தனியாக எனது குழந்தையை விட்டு ெசல்ல மனமில்லாததால் குழந்தையுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று பேசி இருந்தார். சமூக வலைதளத்தில் இந்த பதிவை பார்த்த உறவினர்கள் காவ்யாவை தேடினர். அப்போது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து குழந்தையுடன் காவ்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மாமியார் செந்தமிழ் செல்வியை கைது செய்தனர். தலைமறைவான பழனித்துரையை தேடி வருகின்றனர்.
