ஊத்துக்கோட்டை, பிப்.5: தண்டலத்தில் பயன்பாட்டிற்கு வராததால், குடிமகன்களின் கூடாரமாக மாறிய கிடக்கும் பால் உற்பத்தியாளர்கள் மையம் திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா என பெரும் எதிர்ப்பார்பில் விவசாயிகள் உள்ளனர். பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் 2010-2011ம் ஆண்டு பால் உற்பத்தியாளர்கள் மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கட்டப்பட்டு சில வருடங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன் பிறகு இதை பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால், இந்த மையம் மூடியே கிடப்பதால் இதை சில குடிமகன்கள் அந்த பால் மையத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவது, சமூக விரோதிகள் சிலர் சூதாட்டம் ஆடுவது போன்றவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இந்த பால் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தண்டலம் பகுதி விவசாயிகள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகள் பால் கறப்பதை எடுத்து வந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளுக்கு கொண்டு வந்து பால் மையத்திற்கு கொடுப்பதற்கு சிரமப்பட்டனர். இதனால், தண்டலம் பகுதியிலேயே கடந்த 2010-2011ம் ஆண்டு பால் உற்பத்தியாளர் மையம் திறக்கப்பட்டது. ஆனால், இங்கு திறக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் மையம் சரிவர செயல்படாததால் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், மையம் மூடியே கிடந்ததால் குடிமகன்களும், சமூக விரோதிகளும் குடி மையமாகவும், சூதாடுவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்த மையம் செயல்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
