பொன்னேரி, மே 18: மீஞ்சூர் அருகே இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இறால் பண்ணை இயங்கி வருகிறது. இதன் காரணமாக நெய்தவாயல், மெரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஐந்தாண்டுகளாக சரியான முறையில் விளைச்சல் இல்லாமல் தரிசு நிலமாக மாறி உள்ளது.
காரணம் இந்த இறால் பண்ணையிலிருந்து வெளியாகும் அசுத்தமான தண்ணீர் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து இந்த பகுதி விவசாயிகள் தாசில்தார், ஆர்டிஓ மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நேரடியாக புகார் மனு அளித்தும், இது வரை நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து, கம்யூனிஸ்ட் தோழர்களும், விவசாய சங்கங்களும் இணைந்து இறால் பண்ணையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூடிய விரைவில் இந்த இறால் பண்ணையை அகற்றவில்லை என்றால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
