டெல்லி : அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா வெளியிடுவதற்கு முன்பே அதிபர் ட்ரம்ப் ஏன் அறிவிக்கிறார் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியா மீதான வரியை ட்ரம்ப் குறைத்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியதாக வாஷிங்டன் டிசியில் இருந்து ட்ரம்ப் அறிவித்ததாகவும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது, வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்ற தகவலையும் ட்ரம்ப்பே வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தையும் டிரம்ப்பே அறிவித்துள்ள நிலையில், ஒப்பந்தத்தின் அம்சங்கள் தொடர்பான முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியதை அந்நாட்டு அதிகாரியே தெரிவித்தார். இதன் மூலம் பிரதமர் மோடியை ட்ரம்ப் கட்டுப்படுத்துவது தெளிவாகி உள்ளதாகவும் பிரதமர் மோடி இறுதியில் சரணடைந்து விட்டதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
