இந்தியப் பிரதமரை பணியவைக்க டிரம்ப் என்ன செய்தார்? என மக்களவையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கேள்வி

புதுடெல்லி: இந்திய – அமெரிக்க வர்த்தகம் தொடர்பான டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த தீர்மானத்தில் அவர், “அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை இந்தியப் பிரதமர் ஏற்றுகொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது, அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், அதே சமயம் இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்காமல் அதனை பூஜ்ஜியமாகக் குறைக்கும்.

மேலும், இந்தியா அமெரிக்காவுடனான தனது வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை பிரதமர் மோடி ஏற்றுகொண்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். பிரதமரின் இந்தச் செயல், நமது தேசிய நலன்களை அவர் முழுமையாகக் கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் எக்ஸ் பதிவில், அவர் அமெரிக்காவின் வரிக்குறைப்பு பற்றி மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்தது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதி செய்வது குறித்த உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களுக்குச் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர, டிரம்ப் படைகளைக் குவித்தார். இந்தியப் பிரதமரை பணியவைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் டிரம்புடன் என்ன விவாதித்தார்? என்பதை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: