சென்னை: மகாத்மா காந்தியின் 79வது நினைவு நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று காலை 11 மணிக்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசார் இசைக்கருவிகள் வாசித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அனைவரும் 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடித்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை உறுதிமொழி படிக்க படிக்க அங்கு இருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முதல்வர் படித்த உறுதிமொழி விவரம்: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் / குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமூக வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதி அளிக்கிறேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
