விழுப்புரம், ஜன. 30: விழுப்புரத்தில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக நடத்திய போராட்டதால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பாமகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் - திருச்சி சாலையில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகருக்கு வரும் வாகனங்கள் பல்வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பிரதான சாலையில் மட்டுமின்றி, மக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் நான்குமுனை சந்திப்பு, கோலியனூர் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு, பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது.