டெல்லி : கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலை., டிஜிட்டல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் முதல்வர், ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காததால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பர்திவாலா, நீதிபதி விசுவநாதன் ஆகிய இருவரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் அளித்த பதிலை சீலிடப்பட்ட கவரில் அட்டார்னி ஜெனரல் வழங்கினார். ஆளுநர் பதிலை படிக்க மறுத்த நீதிபதிகள், கேரள முதலமைச்சர், ஆளுநர் பதில்களை ஆய்வு செய்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி தூலியா குழுவுக்கு ஆணையிட்டனர். மேலும் 2 கேரள பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க தலா ஒருவரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் சீலிடப்பட்ட கவரில் பரிந்துரையை அறிக்கையாக டிச.18ல் சமர்பிக்க வேண்டும் என்றும் தூலியா குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இடையே, உச்சநீதிமன்றம், கேரள ஆளுநர், முதல்வர் இடையே ஒத்திசைவு ஏற்படாதது வருத்தம் அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
