தென்காசி, ஜன.12: போகி பண்டிகை நாளை கொண்டாடப்படும்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்குமாறு கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை, பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல் போன்ற நோய்களும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.