இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ரேஷன், ஆதார் கார்டை சாலையில் வீசி போராட்டம்
திருப்பூர், ஜன.12: உடுமலை அடுத்த கல்லாபுரம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினால் எங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட மக்கள் தாங்கள் கொண்டு வந்த ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை சாலையில் வீசி எரிந்து கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.