திருவாடானை, ஜன.7: திருவாடானையில் பயிர்இன்சூரன்ஸ் திட்டத்தில் முழு இழப்பீடு கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசாரின் கெடுபிடியால் முற்றுகை போராட்டமாக மாறியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018- 2019ம் ஆண்டு கடும் வறட்சியால் நெல்வி வசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்கியது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இரண்டு தாலுகாவிலும் 31 வருவாய் கிராமங்கள் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 25 சதவீதம் பாதிக்கப்பட்டதாக கூறி ரூ.5,600 மட்டும் வழங்கியது. இதனால் 100 சதவீதம் பாதிப்புக்கு 25 சதவீதம் இழப்பீடு வழங்குவது நியாயமற்ற செயல் என விவசாயிகள் போராட்டங்களை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 100 சதவீதம் பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என உறுதி கொடுத்திருந்தனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடு வழங்காமல் 25 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.