தொண்டி, ஜன.7: கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தியேட்டர்கள் அடைக்கப்பட்டது. மீண்டும் 50 சதவீத இருக்கையுடன் திறக்கப்பட்டது. பொங்கல் முதல் 100 சதவீத இருக்கையுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகம், தியேட்டர் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் கடைகள் திறப்பட்டது. இந்நிலையில் இன்று வரையிலும் பள்ளிகள் திறக்க வில்லை. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்ட 50 சதவீத மக்களுடன் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்தது. இதனால் மத வழிபாடுகள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் வரும் பொங்கல் முதல் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கையுடன் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தற்போது ஓரளவு கட்டுக்குள் இருககும் வைரஸ் பரவல் இது போன்ற நிகழ்வால் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.