சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு சம்பந்தமான 12 ஆயிரம் பக்கங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நவம்பர் 7ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அதை ஒன்றிய பணியாளர் நலத் துறை பெற்றுக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி பெற்றுள்ள நிலையில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? அதனால், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க காலதாமதம் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
