சிவகாசி. ஜன. 1: சிவகாசி தாலுகா பகுதியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்பட பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.2,500 பணம் வழங்கப்பட உள்ளது. தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தை பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்பட பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.2,500 பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் ஒருசில தினங்களில் பொங்கல் பரிசுகள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைக்கிறார். சிவகாசி தாலுகாவில் உள்ள 142 முழுநேர ரேஷன் கடைகளில் 1 லட்சத்து ஆயிரத்து 31 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுகள், ரூ.2,500 பணம் வழங்கப்பட உள்ளது.. சிவகாசி தாசில்தார் வெங்கடேசன் உத்தரவின் பேரில் தற்போது பொங்கல் பரிசுகள் அந்தந்த ரேஷன் கடைகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது.