சென்னை: சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை விதிக்கக் கோரி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி,‘கோயில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்ட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகிறது என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,’ என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடரலாம்.
அதேசமயம், அந்த கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த மனுவுக்கு நவம்பர் 22ம் தேதிக்குள் தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும். கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கையை அறநிலையத் துறை ஆணையர் வெளியிட வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
