சேலம், டிச.29: சேலம் கோரிமேட்டில் நடைபயிற்சியின் போது, மாநகர கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனர் குப்பைகளை சேகரித்தனர். சேலத்தை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில், நடை பயிற்சியின் போது நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி, குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோம்பைபட்டி சாலை, ஏற்காடு மெயின்ரோடு, பச்சியம்மன் தியேட்டர் ரோடு, ஏடிசி நகர் ஆகிய இடங்களில், பிளாகிங் சிறப்பு பணி நடந்தது. கோம்பைபட்டி சாலையில், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இப்பணி நடைபெற்றது. இதில், காவல் துறையினர், குடியிருப்போர் நலச்சங்கம், இளைஞர்கள் குழு மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 400 பேர், 770 கிலோ எடையிலான பிளாஸ்டிக் மற்றும் இதர மக்காத கழிவுகளை சேகரித்தனர்.