ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவருடைய இல்லத்திற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்-ன் சகோதரர் இம்மானுவேல் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு கடந்த மாதம் 24ம் தேதி மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார்கள் என வாதங்களை முன் வைத்தார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டது இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அதேசமயம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடரும் என உத்தரவிட்டனர்.

 

Related Stories: