சென்னை: சென்னை மாதவரத்தில் வசித்து வரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேரிவர்கீஸ், பெ/வ.65, க/பெ.வர்கீஸ் என்பவர் சமூக நலத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சொந்தமான சென்னை கொளத்தூரில் உள்ள சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2605 சதுரடி கொண்ட காலியான இடத்தை அபகரிக்க வேண்டி மேரிவர்கீஸ் கொடுத்தது போன்று போலியாக கிரைய ஆவணம் தயார் செய்து 1வது எதிரி சீனிவாசன் பெயருக்கு ஒரு போலியான பதிவு செய்யப்படாத கிரைய ஆவணம் பதிவு செய்தது போன்று 1982ம் ஆண்டு செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு ஆவண எண்ணை முறைகேடாக பயன்படுத்தி அதன் மூலம் கொளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெற்றுள்ளனர்.
அந்த கிரைய ஆவணங்களில் முன் ஆவணங்களை பற்றி எந்த வித விவரங்களையும் குறிப்பிடாமல் பட்டா எண்ணை மட்டுமே குறிப்பிட்டு 2வது எதிரி இளஞ்செழியன் மற்றும் அவரது தாயார் 3வது எதிரியான பிரேமா பெயர்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரையம் பதிவு செய்து கொடுத்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து மேரிவர்கீஸ் சொத்தை அபகரித்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க 28.04.2025 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில் (LFIW) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப. உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் A.ராதிகா, இ.கா.ப. வழிகாட்டுதலின் பேரிலும், நில மோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் சிபுகுமார் வழக்குப் பதிவு செய்து, நில மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் V.S.ஆதவன் பாலாஜி தலைமையிலான காவல்குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரி 1.சீனிவாசன், வ/64, கொளத்தூர், சென்னை, 2.இளஞ்செழியன், வ/50, மணலி, சென்னை ஆகிய 2 நபர்களை நேற்று (08.10.2025) முறையே கொளத்தூர் மற்றும் மணலியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலியான கிரைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரிகள் சீனிவாசன் மற்றும் இளஞ்செழியன் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பதும், எதிரி சீனிவாசன் என்பவர் கொளத்தூரில் உள்ள தியேட்டர் உரிமையாளர் என்பதும், மற்றொரு எதிரி இளஞ்செழியன் என்பவர் Steel கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப்பின்னர், நேற்று (08.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
