ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி தனியாரிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆலந்தூர் மண்டல தூய்மை பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆலந்தூர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் பரங்கிமலை உதவி கமிஷனர் ஜீவரத்தினம், இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.