செஞ்சி, டிச. 23: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 3 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து வந்திருந்தனர். காலையில் எடை போடப்பட்டு வியாபாரிகள் விலை மதிப்பீடு செய்தனர். பின்னர் திடீரென வியாபாரிகள் விலை பட்டியலை வழங்காமல் நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் விலையை வெளியிடவேண்டும் எனக் கூறி மார்க்கெட் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்து செஞ்சி இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுக்கு உறுதி கூறினர். அதன்பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதுகுறித்து மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகள் கமிட்டி நிர்வாக துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கமிட்டியில் ஒரு வியாபாரி விவசாயிகளுக்கு வழங்கும் பணத்தை காலதாமதமாக வழங்குவதால் அவரை ஒரு வாரத்திற்கு ஏலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறியிருந்தனர்.
இதனால் வியாபாரிகள் அவருக்கு ஆதரவாக ஏலம் விலை பட்டியலை வெளியிடாமல் நிறுத்தி வைத்தனர். இப்பிரச்னையில் கமிட்டி நிர்வாகம் வியாபாரி சங்க தலைவர் குமரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்று வியாபாரிகள் மத்தியில் இனி நடைபெறாது எனவும், மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் மேலிட உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததன்பேரில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு மீண்டும் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களுக்கு விலை பட்டியலை வியாபாரிகள் வெளியிட்டனர். இதனால் சிறிது நேரம் கமிட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.