சொகுசு காரில் கஞ்சா விற்றவர் கைது

திருப்பூர், டிச.23: திருப்பூரில் சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, காங்கயம் ரோடு, ஏரி கருப்பராயன் கோவில் அருகே சந்தேகம்படும்படி சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

காரை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த நபரை போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், காங்கயம் ரோடு விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த ஆல்வின் ராஜா (30) என்பதும், காரில் கஞ்சா எடுத்து வந்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: