சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் நுழைந்து மொட்டை மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீடு நீலாங்கரையில் உள்ளது. இந்த வீட்டில் நேற்று நுழைந்து மொட்டை மாடியில் ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இவர் எப்படி விஜய் வீட்டில் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார் என தெரியவில்லை. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
